விசா வழங்கும் செயன்முறை; குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விளக்கமறியலில்!

விசா வழங்கும் செயன்முறை; குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விளக்கமறியலில்!

Editor 1

கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் இலத்திரனியல் விசா வழங்கும் செயன்முறை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறி நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

தனியார் நிறுவனங்களுக்கு விசா வழங்கும் செயன்முறை வழங்கப்பட்டதன் ஊடாக முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களால் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

அந்த மனுக்களின் அடிப்படையில் குறித்த தீர்மானத்தை இரத்துச் செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்த தவறியதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டது. 

இந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. 

அதன்பின்னர் வழக்கு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டதுடன், அதுவரையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் ஹர்ச இலுக்பிட்டிய வைக்கப்பட்டிருந்தார். 

இதனையடுத்து மீண்டும் விசாரணை ஆரம்பமான நிலையில், இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

குறித்த, வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

Share This Article