வெளிநாட்டில் பணம் பெற்று வன்முறை! கைக்குண்டுடன் யாழில் இளைஞர் கைது!

editor 2

வெளிநாட்டில் உள்ளவரிடம் பணம் பெற்று வன்செயல்களில் ஈடுபட்டார் என்று சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், கைதானவருடன் சேர்ந்து செயல்பட்டனர் என்று சந்தேகிக்கப்படும் மேலும் இளைஞர்கள் ஐவரைக் கைது செய்யவும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்புப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர் அண்மையில், யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற கடைகள் எரிப்பு, வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்பு டையவர் என்று கூறப்படுகின்றது.

உடுவிலை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைதானவராவார். அவர் கைது செய்யப்பட்டபோது கைக்குண்டு ஒன்றும் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்கள் என்பனவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இளைஞர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

Share This Article