இந்திய மீனவர்களை கைது செய்யச் சென்ற இலங்கை கடற்படைச் சிப்பாய் நீரில் மூழ்கி மரணம்!

இந்திய மீனவர்களை கைது செய்யச் சென்ற இலங்கை கடற்படைச் சிப்பாய் நீரில் மூழ்கி மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்யச் சென்ற இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்திய மீனவர்களை கைதுசெய்ய முயன்ற போது படகிலிருந்து தவறி விழுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது ஒரு இந்திய மீனவர்களின் படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் இந்திய மீனவர்கள் 10 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகும் கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதே பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article