அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க பொருத்தமான நேரம் இதுவே – யாழில் ஜனாதிபதி!

அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க பொருத்தமான நேரம் இதுவே - யாழில் ஜனாதிபதி!

Editor 1

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இழப்பீடுகள், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே நேரம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டத்தைத் திறந்து வைத்தார். இதன் பின்னர், அங்கு உரையாற்றிய அவர்,

யாழ்ப்பாணம் மாவட்டம் நீண்டகாலமாக அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கவில்லை. வருமானம் போதியளவில் இல்லை. மக்கள் வேலை தேடும் நிலை காணப்படுகிறது. யாழ். மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு அநேகமான சாத்தியங்கள் உள்ளன.

யாழ். மாவட்ட மக்களின் காணிப் பிரச்னைகள் உள்ளிட்ட சில பிரச்னைகளை எம்மால் தீர்க்க முடிந்துள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள (அரசியல்) கைதிகள் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான பிரச்னைகளும் உள்ளன.

எங்களால் இன்னும் இதனை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. அதற்கான தீர்வுகள் தற்போதுள்ள அரசியல் பிரச்னைகளைச் சுற்றியே உள்ளன. நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இழப்பீடுகள், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே நேரம் என்று நான் நம்புகிறேன்.

அதற்கு அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து வருவதோடு, வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளேன்.

முன்னைய ஆணைக்குழு அறிக்கைகள் அனைத்தையும் ஆராய்ந்து தொகுக்கப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கை அண்மமையில் எமக்கு கிடைத்தது.

இந்த அனைத்து ஆணைக்குழு அறிக்கைகளின் தாய் அறிக்கையாகவும் இது தொடர்பான கடைசி ஆணைக்குழு அறிக்கையும் அதுவாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்காக மற்றுமோர் ஆணைக்குழுவின் அவசியம் இல்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் பணிமனை மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்ற அவர்களின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை அப்படியே செய்ய வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் பணிமனை மற்றும் இழப்பீடுகள் தொடர்பான முழுப் பிரச்னைக்கான தீர்வுகளிலும் மாற்றங்கள் செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

பொருளாதார நெருக்கடியால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களால் அதிக
ளவு இழப்பீடு தொகையை செலுத்த முடியவில்லை. எனவே அதற்காக பணம்
ஒதுக்க வேண்டும். அத்துடன் எது உண்மை, என்ன நடந்தது, நல்லிணக்கத்துக்காக நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்விக்குறி காணப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை கொண்டு வருவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அதிகாரம் குறித்த பிரச்னைகள் அதற்குள் காணப்படுகின்றன.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவால் நடைமுறைப்படுத்தப்படும் நீதித்துறை அதிகாரங்கள் எமக்கு இருக்க வேண்டுமா அல்லது அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீதித்துறை அதிகாரங்களைச் செயல்படுத்தும் தனி நீதிமன்றம் வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே, இது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்.

அத்துடன், வடக்கு மாகாணம் அபிவிருத்திக்காக சாத்தியக் கூறுகளை அதிகமாக கொண்டிருக்கிறது. இந்த மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பெருமளவில் உள்ளது. அதனால் யாழ்ப்பாணத்தை இலங்கையின் முக்கிய வலுசக்தி மையமாக கட்டியெழுப்பமுடியும். வட மாகாணத்தில் இந்த வலு சக்தியை நாம் இதுவரை பயன்படுத்தவில்லை. ஆனாலும் ஜிகாவாட்ஸ் அளவிலான வலுசக்தி இங்கு உள்ளது.

மேலும், நாட்டில் போட்டி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். வடக்கு மாகாணம் அதற்குள் முக்கியமான இடத்தை பிடிக்கிறது.

இங்குள்ள விவசாயிகளுக்கு அதற்கான திறன் உள்ளது. இதன் மூலம் வட
மாகாண மக்களின் வருமான மட்டத்தை பெருமளவில் மேம்படுத்த முடியும்.

கைத்தொழில்களைப் பொறுத்தவரையில் காங்கேசன்துறையில் முதலாவது முதலீட்டு வலயத்தை அமைப்பது குறித்தும், பின்னர் பரந்தன் மற்றும் மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். மேலும் திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயல்படுகின்றோம். வடக்கில் சுற்றுலாத்துறைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம் – என்றும் கூறினார்.

Share This Article