பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிலிருக்கும் போது எல்லை மீறி பலத்தைப் பிரயோகித்தால் அதனை அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டுமென பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவால் நடத்தப்பட்ட தாக்குதலில் இளைஞன் ஒருவரின் விதைப்பை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஹொரணை – ஒலபொடுவ ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருக்கும் போது எல்லை மீறி பலத்தைப் பயன்படுத்தினால், அதனை அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
இதேவேளை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோத போதைப்பொருள், மதுபானம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட முந்தைய பல குற்றங்களுடன் தொடர்புடைய ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.