விடுதலைப்புலிகளின் தலைவர் செய்யாததை ராஜபக்சர்கள் செய்தனர் – பொன்சேகா குற்றச்சாட்டு!

விடுதலைப்புலிகளின் தலைவர் செய்யாததை ராஜபக்சர்கள் செய்தனர் - பொன்சேகா குற்றச்சாட்டு!

editor 2

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் அதனை செய்தனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடன் பெற்று அதனை மீள செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் பேசும் போது, ராஜபக்ஷர்களை நினைவு கூராவிட்டால் அது நாம் எமது பொறுப்பினை தட்டிக்கழிப்பதற்கு சமமாகும்.

மக்களுக்கு எவ்வித பயனும் அற்ற வேலைத்திட்டங்களுக்காக பாரிய தொகையில் கடன் பெற்று, அதனை மோசடி செய்துள்ளனர். இவ்வாறான மோசடிகளின் பலனாக 2022இல் எரிபொருள், எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவை திரும்பிச் சென்றன.

அது மாத்திரமின்றி அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைமையும் ஏற்பட்டது.

ஊழல், மோசடி நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என மக்கள் நம்பினர்.

அது தான் உண்மை நிலைமை என்பதே எனது நம்பிக்கையுமாகும். இளம் தலைமுறையினர் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.

எனவே முந்தைய கால கட்டத்திலிருந்த அரசியல்வாதிகள் தற்போது காலாவதியாகிவிட்டனர். எனவே இந்த அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

இந்த அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் முந்தைய ஊழல், மோசடி அரசியல்வாதிகள் அதனால் பலன் பெறுவார்கள்.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும், முந்தைய ஆட்சியாளர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பளிப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த போதிலும், 5 இலட்சம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

சஜித் பிரேமதாசவின் வாக்குகளும் 50 சதவீதத்தால் குறைவடைந்தது. எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஓரளவு வாக்குகளைப் பெற்றுள்ளதால் அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

2 இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ள சஜித், அடுத்து தானே ஜனாதிபதி என எண்ணிக் கொண்டிருக்கின்றார். நாமலுக்கு 6 இலட்சம் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன.

தந்தையைப் போன்று மீண்டும் நாட்டை ஏமாற்றி பிளைக்க முடியும் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கின்றார். எவ்வாறிருப்பினும் இவர்கள் இருவரிடமும் மக்கள் நாட்டை ஒப்படைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

தற்போது இவர்களுக்கு இராணுவ வீரர்கள் மீது புது விதமான மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்ததாக அதனை பெரும் குறையாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நாம் அது குறித்து கவலை கொள்ளவில்லை. ராஜபக்ஷர்கள் தான் இராணுவத்தினரைக் கொண்டு இலாபம் தேட முற்படுகின்றனர்.

இராணுவத்திற்கு சிப்பாய்களே ஆட்சேர்க்கப்படுகின்றனர். இராணுவ வீரர்கள் அல்ல. எனவே அது வெட்கப்படக் கூடிய சொற் பிரயோகம் அல்ல.

இன்று இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என அழைத்தமைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷர்கள், அன்று யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தளபதியான என்னை சிறையிலடைத்து நன்கு உபசரித்தனர்.

என்னுடன் பணியாற்றிய இராணுவத்தில் முக்கிய பதவி நிலைகளை வகித்த 35 இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியம் இன்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர்.

சரத் பொன்சேக்காவை சிறையிலடைத்ததை தன்னால் அனுமதிக்க முடியாது என தற்போது நாமல் கூறுகின்றார். ஆனால் அதனை அவரது தந்தையும், சித்தப்பாவும் அனுமதித்தனர்.

எனது மகள்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது, அவர்கள் விமான நிலையத்தில் பல மணித்தியாலங்கள் தடுத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

பிரபாகரன் கூட இவ்வாறு எமது குடும்பங்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் எமது குடும்பத்தினரையும் பழிவாங்கினர் என்றார்.

Share This Article