ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஜேவிபியும் நிதி பெற்றது என்கிறார் தயாசிறி!

ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஜேவிபியும் நிதி பெற்றது என்கிறார் தயாசிறி!

editor 2

ஜனாதிபதி நிதியத்திலிருந்து 2004 – 2008 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினரும் (ஜே.வி.பி.) நிதி உதவிகளைப் பெற்றுள்ளனர். இது தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக நாம் தகவல்களைக் கோரிய போதிலும், அந்த தகவல்கள் வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கம் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவையும் செயலிழக்கச் செய்ய முயற்சிக்கின்றதென பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

திங்கட்கிழமை (16) தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு சென்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2008ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து உதவி பெற்றவர்களின் பெயர் பட்டியலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

2004 – 2008 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து உதவி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த காலப்பகுதி ஜே.வி.பி. அப்போதைய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்த காலப்பகுதியாகும். எதற்காக இந்த 4 வருடங்களை தவிர்த்து பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது? அவ்வாறெனில் அந்த 4 ஆண்டுகளில் ஏதேனும் மோசடி இடம்பெற்றுள்ளதா? இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களைக் கோரியிருந்தேன்.

எனினும் 5 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அந்த தகவல்கள் வழங்கப்படவில்லை.

குறித்த காலப்பகுதியில் சில ஜே.வி.பி.யினரும் இந்த ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியுதவி பெற்றுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

06 மாதங்களின் பின்னர் நாம் கோரிய தகவல்களை வழங்க முடியாது என எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே நாம் கோரிய தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.

தற்போது இவ்வாணைக்குழுவுக்கு தலைவர் ஒருவர் இல்லை. நீண்ட நாட்களாக இதற்கான தலைவர் ஒருவர் நியமிக்கப்படாமலிருக்கின்றார்.

பணிப்பாளர் சபையிலும் ஒருவர் குறைவாகும். தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.

Share This Article