வவுனியாவில் வைத்தியர் கொலை; மரணதண்டனைத் தீர்ப்பிலிருந்து சந்தேக நபர் முற்றாக விடுதலை!

வவுனியாவில் வைத்தியர் கொலை; மரணதண்டனைத் தீர்ப்பிலிருந்து சந்தேக நபர் முற்றாக விடுதலை!

editor 2

வவுனியாவில், வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம மரண தண்டனை வழங்கிய நிலையில்,
மேன்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையில் இருந்து விடுத்து, விடுதலை செய்து உத்தரவிட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சசி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை நேற்று அறிவித்தது.

இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம், தீர்ப்பை அறிவித்தது.

வவுனியாவில் 2009 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி, கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் சுல்தான் முகைதீன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஜூன் மாதம் 8 ஆம் திகதி அன்றைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நெடுமாறனைக் குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக கௌரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது.

அந்தவகையில் குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன் முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.

மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம், சட்டத்தரணி அன்ரன் துரைசிங்கம் ஜெயானந்தன்,
ஓஷதி ஹப்பு ஆராய்ச்சி, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர்.

சட்ட மா அதிபர் சார்பில், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆசாத் நவாவி ஆஜராகி இருந்தார்.

Share This Article