தேர்தல் விதிமுறைகளை மீறி லாவகமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறித்து தங்களால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறை திணைக்களத்துக்கும் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குமே இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக எமது செய்திச் சேவைக்குக் கருத்து தெரிவித்த மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன், தேர்தலின் போது இடம்பெறும் விதி மீறல்கள் தொடர்பில் காவல்துறை திணைக்களம் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அது சார்ந்த நடவடிக்கைகளையே மேற்கொள்ளும் எனக் கூறினார்.
இதேவேளைத் தனியொரு கட்சி ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெறாத உள்ளூராட்சி மன்றங்களின் தலைமை நிர்வாகியைத் தெரிவு செய்யும் விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு தலையிடாது என்று, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் தனியொரு கட்சி ஆட்சியமைக்கும் பெரும்பான்மை பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைமை நிர்வாகியைத் தெரிவு செய்யும் விடயத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீடு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு அதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டனர்.
இனி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு அந்தந்த கட்சிகளிடமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகி இருக்கும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பன, வெறுமனே பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரம் ஏனையத் தரப்புடன் இணைந்து கூட்டினை உருவாக்குவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பதான ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுல கஞநாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சூழ்நிலையில், குறித்த உள்ளூராட்சி மன்றத்தினால் பிரச்சினைகள் இன்றி இயங்கமுடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.