சட்டத்தின் பிரகாரமே மின் கட்டணத் திருத்தம் – ஜனாதிபதி!

சட்டத்தின் பிரகாரமே மின் கட்டணத் திருத்தம் - ஜனாதிபதி!

editor 2

சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜீலை மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும். குறைந்தபட்ச அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படலாம். கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. அதிகளவான சதவீதத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது. மின்கட்டண விவகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தக்கட்ட தவணை விடுவிப்புக்கு தடையாக அமையாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தனியார் ஊடகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பொருளாதார பாதிப்பினால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதாக குறிப்பிடுகின்றீர்கள். மின்கட்டணம் அதிகரிக்கப்படுமா என்று மக்கள் அச்சமடைந்துள்ளார்கள். உண்மையில் மின்கட்டணம் அதிகரிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அங்கு ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

வலுசக்தியின் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பின் பிரதான அம்சமாகும். வலுசக்தியின் சுயாதீனத்தன்மை இல்லையாயின் தேசிய பாதுகாப்பு பலவீனமடையும்.

இதனால் தான் மின்சார சபையை தனியார்மயப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

நடைமுறையில் தனியார் தரப்பினருக்கு மின்சாரத்தை விற்பனை செய்ய முடியும்.இருப்பினும் மின்விநியோக கட்;டமைப்பின் தனியுரிமை இலங்கை மின்சார சபைக்கே உண்டு.

யார் மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும் அதனை மின்சார சபைக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆகவே மின்கட்டமைப்பின் தனியுரிமை அரசிடமே இருக்க வேண்டும்.

இலங்கை மின்சார சபையை பராமரிப்பதற்கு தொடர்ந்து மக்களின் வரிப்பணத்தை வழங்க முடியாது. மின்னுற்பத்திக்கான செலவுக்கு அமைய மின்சார சபை மின்பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பது எமது கொள்கை.

மின்னுற்பத்தி செலவுக்கு அமைய மின்கட்டணம் தீர்மானிக்க வேண்டும் என்றே சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. மின்சார சபைக்கு திறைசேரியால் தொடர்ந்து நிதி விடுவிக்க முடியாது.

ஏப்ரல் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான செலவு மற்றும் வரி உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மே மாதத்துக்கான எரிபொருள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலக்கிடப்பட்ட எதிர்பார்ப்புக்கு அமைவாகவே மின்கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. வருடத்தில் இரண்டுமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் குறைக்கப்பட்டது. ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களை வரையறுத்து இலங்கை மின்சார சபை நிறுவன ரீதியில் நட்டமடைவதாக மின்சார சபை குறிப்பிட்டது. இல்லை மின்சார சபை நட்டமடையாது என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டது.

சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜீலை மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும். குறைந்தபட்ச அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படலாம்.

கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. அதிகளவான சதவீதத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்றார்.

Share This Article