சம்பூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

சம்பூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

editor 2

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் களப்புக் கடல் பகுதியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை மீட்டதாகவும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்திரசிறியின் ஆலோசனைக்கமைவாக சம்பூர் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, நான்கு பரல்களிலிருந்து கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடா 757 போத்தல்களும், 31 போத்தல் கசிப்பும் மற்றும் வயர் உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

அத்தோடு சம்பூர் – நல்லூர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சந்தேக நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article