ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு கரு வரவேற்பு!

editor 2

நாட்டின் துரித முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் தேசிய ஊழல் ஒழிப்பு செயற்திட்டமொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதையும், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமைத்துவம் வழங்கி செயற்படுவதையும் பெரிதும் வரவேற்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக இலஞ்ச, ஊழல் ஒழிப்பை வலியுறுத்திவரும் சிவில் சமூக அமைப்புக்களில் ஒன்றான  சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் கரு ஜயசூரிய, அதில் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டின் துரித முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் தேசிய ஊழல் ஒழிப்பு செயற்திட்டமொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதையும், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமைத்துவம் வழங்கி செயற்படுவதையும் பெரிதும் வரவேற்கிறோம்.

அதேவேளை இலஞ்சம் மற்றும் ஊழல் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாட்டுமக்களின் விருப்பம் இச்செயற்திட்டத்தின் ஊடாக ஈடேறவேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

அதேபோன்று 2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாற்றத்தின் அடைவாகவே நாம் இந்த முயற்சியைக் கருதுகிறோம்.

அத்தோடு சிவில் சமூகத்தினர் ஒன்றிணைந்து நாட்டின் சிறப்பான எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் சகல அரசியல் தரப்புக்களுடனும் இணைந்து செயலாற்றியமையை நினைவுகூருகிறோம். அன்று இம்மாற்றத்துக்கு வழிகாட்டிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இன்று எம்மோடு இல்லை. அவர்கள் அனைவரையும் நாம் இவ்வேளையில் நினைவுகூருகிறோம்.

அதேவேளை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான புதிய சட்டமொன்றை உருவாக்குமாறும், அதற்குரிய கட்டமைப்பை வலுப்படுத்துமாறும் கடந்த சில வருடங்களாக நாடளாவிய ரீதியில் வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், அதனை இலக்காகக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாட்டில் இயங்கிவரும் சிவில் சமூகத்தினருடன் ஒன்றிணைந்து செயற்பட்டமை பெரிதும் வரவேற்கத்தக்கதொரு விடயமாகும்.

அதுமாத்திரமன்றி இந்த இலக்கினை அடைந்துகொள்வதற்காக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகத்தினால் அளிக்கப்பட்ட ஒத்துழைப்பினையும் பாராட்டுகிறோம்.

அதன்படி தற்போதைய அரசாங்கத்தின் பிரதான இலக்கான இலஞ்சம் மற்றும் ஊழலற்றநாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சியையும், அதற்கு ஜனாதிபதி அளித்துவரும் தலைமைத்துவத்தையும் பெரிதும் பாராட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Share This Article