மீண்டும் சிக்குன்குனியா!

editor 2

நாட்டில் மீண்டும் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமையினால், இதுதொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நுளம்புகளின் பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் நாட்டில் சிக்கன்குனியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதன் மூலம் சிக்குன்குனியா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 115 நாடுகளுக்கு பரவியுள்ள சிக்குன்குனியா நோய் தற்போது இலங்கையிலும் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, நாட்டில் 190 சிக்குன்குனியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 65 பேர் வைத்திய ரீதியாக சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, டெங்கு நோய் மீண்டும் பரவி வரும் நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் ஊழியர்கள் 37 பேர் உட்பட 87 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஹொரணை – எல்லகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மலேரியா தொற்று இருப்பதும் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இலங்கை மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட போதிலும், இந்தாண்டு இதுவரை 14 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், மலேரியா தொற்றுக்குள்ளான அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article