தேசபந்து விவகாரம்; பாராளுமன்றம்செல்கிறது!

editor 2

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்க சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் 10 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், முற்பகல் 11 மணி முதல் 11.30 மணி வரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை ஆகியவற்றின் விவாதத்துக்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 5.30 மணிக்கு பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஏப்ரல் 9ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் 10 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரையான காலப்பகுதி பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், முற்பகல் 10.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான காலப்பகுதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், முற்பகல் 11 மணி முதல் 11.30 மணி வரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையான காலப்பகுதி பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு சட்டபூர்வ நிறுவனங்களின் 17 வருடாந்த அறிக்கைகளும் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 5 மணி முதல் பிற்பகல் 7 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கான விவாதத்துக்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஏப்ரல் 10ஆம் திகதி வியாழக்கிழமை, முற்பகல் 9.30 மணி முதல் 10 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், முற்பகல் 11 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையில், கடந்த 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” குறித்த விவாதத்தை நடத்துவதற்கும், இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளினை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Share This Article