காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சர்வதேச அபிவிருத்திக்கான
அமெரிக்க முகவரகத்துக்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது கூட உண்மையாக இருக்கலாம். எனவே இது குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்-
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பினால் பொருளாதாரத்தில் பாரிய
பாதிப்பு ஏற்பட்டிருக்கும். 2022 இல் 14 மணித்தியாலங்கள் காணப்பட்ட மின் துண்டிப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறுத்தினார்.
ஆனால் இந்த அரசாங்கத்துக்கு ஓரிரு மணித்தியாலங்களில் ஏற்பட்ட சிக்கலைக் கூட முகாமைத்துவம் செய்ய முடியாதுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதற்கமைய இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் (யு.எஸ்.எயிட்) ஆட்சிகளில் குழப்பங்கள் ஏற்பட்டுத்தப்பட்டிருப்பது உண்மையெனில் அது மிகவும் பாரதூரமானதாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் எம்மைப் போன்ற சிறிய நாடுகளின் இறையாண்மையில் கடுமையான தாக்கத்தைஏற்படுத்தும். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துக்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது கூட உண்மையாக இருக்கலாம்.
அவ்வாறில்லை எனில் திடீரென எவ்வாறு அத்தகையதொரு ஆர்ப்பாட்டம்
தோற்றம் பெற்றது? எனவே இது குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப் படவேண்டும்-என்றார்.