அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
2029 ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாகத் தேர்ந் தெடுக்கப்படுவார் என்று தற்போதைய அரசாங்கம் அஞ்சுவதாகவும், அதனால்தான் அவர்களை குறிவைப்பதாகவும் மனோஜ் கமகே குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு வருகை தந்திருத்த
சட்டத் தரணி மனோஜ் கமகே நீதிமன்ற வாயிலில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்-
இந்த அரசாங்கம் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக அவற்றை திசை திருப்ப எண்ணுகின்றது. சிவப்பு எச்சரிக்கையுடன் 300 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாக இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
அரசாங்கம் பிரச்னைகளை மறைக்க எண்ணுகின்றது. எனினும், மக்கள் பிரச்னைகளுடன் வாழ்கின்றனர் என்பதை நாம் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
நாட்டில் அரசி விலை குறைக்கப்பட வேண்டும், தேங்காய் விலை குறைக்கப்பட வேண்டும், மக்களின் வாழ்க்கைச்செலவு குறைக்கப்பட வேண்டும் மற்றும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவேண்டும்.
இவற்றை மறந்து விட்டு அரசியல் நாடகங்களை நடத்த முயற்சிக்க வேண்டாம். அரசாங்கத்தால் ராஜபக்ஷர்கள் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள் – என்றார்.