அநுரவுக்கு சர்வதேசம் ஆதரவளிக்க வேண்டும் என்கிறார் சொல்ஹெய்ம்!

அநுரவுக்கு சர்வதேசம் ஆதரவளிக்க வேண்டும் என்கிறார் சொல்ஹெய்ம்!

editor 2

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும். அவரின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்துள்ளன என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடகப் பதிவிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும், சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு இரண்டு
வாரங்களாகின்றன. அந்தக் காலத்தை, அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

இராஜதந்திர செயல்பாடுகளை, மிகச்சரியான முறையில் முன்னெடுத்துள்ளார். முதலில் இந்திய தூதுவருடன்சந்திப்பு, பின்னர் சீனத் தூதுவருடன் சந்திப்பு. இதனை நாம் பார்த்தால், இந்தியாவுக்கே முதலிடம், அதற்கு பின்னரே சீனா என்ற சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர், அனைத்து நாடுகளினதும் தூதுவர்களை அவர் சந்தித்துள்ளார். மேற்குலகம், ரஷ்யா மேலும் பல நாடுகள் அடங்கும். இலங்கைக்கு முதலிடம் என்ற வெளி விவகார கொள்கையே பின்பற்றப்படும் என்ற சமிக்ஞையை அவர் வெளியிட்டுள்ளார். பதவியேற்றதும், அநுரகுமார திஸநாயக்க உடனடியாக கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார். அவர் அங்கு மகா நாயக்க தேரர்களின் ஆதரவைப் பெற்றார். அதன் பின்னர், தமிழ் முஸ்லிம் அரசியல் மதத் தலைவர்களை சந்தித்துள்ளார். அனைத்து இன சமூகத்துக்குமான இலங்கையை உருவாக்குவதற்கான அவரது வலியுறுத்தல்கள் வலுவானவையாக காணப்படுகின்றன.

அவர் வர்த்தக சமூ கத்தை நோக்கி, தனது கரங்களை நீட்டியுள்ளார். வர்த்தக சமூகத்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றுவதன் மூலமே, வளமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும். கல்வி, சுகாதாரம் மற்றும் வறியவர்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றை மேம்படுத துவதற்கான வளங்களை கொண்டுவரமுடியும் என்பதை அவர் கோடிட்டுக்
காட்டியுள்ளார்.

அவர் ஊழல் அற்ற குழுவினரை, அரச அதிகாரத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
அமைச்சர்களுக்கு, ஆடம்பரகார்களுக்கான சலுகைகளை நிறுத்தியுள்ளார். அரச தலைவர்களுக்கு ஆடம்பரமற்ற வாழ்க்கை என்பதை அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இவை அனைத்தும், இலங்கையின் பிரச்னைகளுக்கு தீர்வை வழங்காது. இடதுசாரி தலைவர் குறித்து, இராஜதந்திரிகள் மத்தியில் காணப்படும் சந்தேகத்தை இது போக்காது. ஆனால், இது நிச்சயமாக சிறந்த ஆரம்பம். அமைதியான, பல் சமய, பசுமையான, செழிப்பு மிக்க இலங்கையை கட்டியெழுப்ப, அனைவரும் அநுரகுமார திஸநாயக்கவுக்கு உதவ வேண்டும் – என்றுள்ளது

Share This Article