மட்டக்களப்பில் இளைஞர் கொலை!

மட்டக்களப்பில் இளைஞர் கொலை!

editor 2

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியில் சத்தம் எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 19 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

அதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 30 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (27) இரவு இடம்பெற்றதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு வீதியில் அதிக ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருடன் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வேளை, இளைஞரின் தந்தை தனது மகனை அங்கிருந்து மீட்டு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த கூட்டத்தினர், இளைஞரின் கழுத்துப் பகுதியை குறிவைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கும் கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share This Article