அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு!

அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு!

editor 2

அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் முடிவு தேர்தலுக்கான வாக்குறுதியோ வெறும் ஜனரஞ்சக வார்த்தையோ அல்ல . இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற கலால் வரி கட்டளைச் சட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியன தொடர்பான கட்டளைச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

எதிர்காலத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது தேர்தல் வாக்குறுதியா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

நாம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 13 இலட்சத்து 80.000 அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம்.

ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளையும் அதிகரித்தோம். அவர்களுக்கு மேலும் 3000 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமான நடவடிக்கைகள். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை மேற்கொண்டார்.

நாட்டு மக்களின் வாழ்வாதார நெருக்கடியை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம். வரிச்சுமையும் காணப்படுவதால் வரிகளை குறைக்க வேண்டியுள்ளது. முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை மேற்கொள்வது அவசியம்.

நாட்டு மக்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு அவர்களுக்கான சக்தியை பெற்றுக் கொடுப்பது அவசியம்.

அதனைக் கவனத்திற் கொண்டே உதய ஆர் செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவில் எந்த அரசியல்வாதிகளும் பங்கேற்கவில்லை. நிதியமைச்சு உட்பட அரச அதிகாரிகளே இடம் பெற்றனர்.

அந்தக் குழு இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. எதிர்காலத்தில் எவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பான பரிந்துரையை அதில் உள்ளடக்கியுள்ளது. அந்த இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அந்த இடைக்கால அறிக்கையில் தற்போதுள்ள அனைத்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு 25,000 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவாக அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் திறைசேரி 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கி அதனை வழங்குவதற்கான முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

திறைசேரியின் செயலாளரும் அமர்ந்திருந்த குழுவிலேயே இந்த திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 24 வீத அதிகரிப்பு அடுத்த வரவு செலவு திட்டத்தில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் முகாமைத்துவம் செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளே தவிர ஜனரஞ்சக வார்த்தைகள் அல்ல என்றார்.

Share This Article