நீரில் மூழ்கி மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவன் பலியான பரிதாபம்!

நீரில் மூழ்கி மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவன் பலியான பரிதாபம்!

Editor 1

மருத்துவத் துறைக்குத் தெரிவான அம்பாறை காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது- 20) என்ற மாணவன் நேற்று வெள்ளிக்கிழமை காலை நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத் தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரணமடைந்த மாணவன் அக்சயன் அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளையாவார்.

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்குத் தெரிவான இரண்டு மாணவர்களில் அக்சயனும் ஒருவராவார்.

இவர் அண்மையில் வெளியான க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து
மாவட்டத்தில் 23 ஆவது இடம் வந்து மருத்துவத் துறைக்குத் தெரிவாகியிருந்தார்.

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று அங்கு தரித்து விட்டு நேற்று வெள்ளிக்கிழமை காலை வரும்பொழுது பொத்துவில் மற்றும் லகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி
ஆற்றிலே நீராடியபோது மூழ்கி உயிரிழந்தார்.

மாணவனின் சடலம் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக
லகுகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This Article