ரஸ்ய எல்லையில் இலங்கையின் முன்னாள் படையினர் நூற்றுக்கணக்கில் மரணம்!

ரஸ்ய எல்லையில் இலங்கையின் முன்னாள் படையினர் நூற்றுக்கணக்கில் மரணம்!

Editor 1

பலகுழுக்களால் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைக்காக சேர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னாள் இலங்கைப் படையினர்  ரஸ்ய எல்லையில் உள்ள  கொலைகளங்களில் உயிரிழக்கின்றனர் என அங்கிருந்து தப்பிய  முன்னாள் இராணுவத்தினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றின் பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படையினர் உயிரிழந்துள்ளனர்.

இதே எண்ணிக்கையிலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே என்னை ரஸ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்தனர் அதற்காக 1.6 மில்லியன் செலுத்தினேன் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை என தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என தெரிவித்துள்ள அவர் ரஸ்யாவில் தமிழில் பேசிய ஒருவர் எங்களை வரவேற்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னெர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஸ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ள குறித்த நபர், சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் எங்களிற்கு உதவினார் அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்றார்கள் அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த முகாமிலிருந்தவேளை இலங்கையர்கள் 70 பேர் காணப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article