பொதுவேட்பாளர் – கடினம் என்கிறார் சார்ள்ஸ் எம்பி!

பொதுவேட்பாளர் - கடினம் என்கிறார் சார்ள்ஸ் எம்பி!

editor 2

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம் என்று கூறி
யுள்ளபாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மன்னாரில், நேற்று அவரின் பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

தமிழ் அரசு கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது யாரை ஆதரிப்பது என்பது குறித்து கலந்தாலோசிக்கவில்லை.

தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஊடகங்களில் கருத்துகள் வெளிவருகின்றன. என்னைப் பொறுத்தமட்டில் அவர்கள் கூறுவதன் பிரதான காரணம் தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தாலும் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகவே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கருத்துகள் நிலவுகின்றன. எனது தனிப்பட்ட கருத்தின்படி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம்.

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பைப் பொறுத்த வரையில் அங்குள்ள தமிழர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை – காணவும் முடியாது.

எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கட்சித் தலைவர் அல்லது பொதுவானவர்களையோ அடையாளம் காண்பது என்பது கடினமான விடயம். குறிப்பாக, தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்துக்கு மக்கள் மத்தியில்போதிய வரவேற்பு இருப்பதாக நான் காணவில்லை -என்றார்.

Share This Article