மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
காரைநகரில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிராசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு பிரதமர் மேலும் உரையாற்றியதாவது,
காரைநகர் மண்ணிற்கு வருகை தந்தமையையிட்டு மகிழ்ச்சிடைகிறேன். இந்த மண் பல பண்பாட்டு கலாசாரங்களை கொண்டுள்ளது. இதனை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான பங்களிப்பை வழங்குவோம்.
1977 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் காரைத்தீவு மண்ணில் சுமார் 80 ஆயிரம் பேர் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று சுமார் 10500 பேர் மாத்திரமே வாழ்கிறார்கள். இந்த மண்ணில் பல திறமையானவர்களும் பண்டிதர்களும், கல்விமான்களும் தோற்றம் பெற்றார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டுச்சென்றுள்ளனர்.
இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவார்கள் என நாம் நம்புகிறோம். ஆதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம். சரியான வசதிகளும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதன் ஊடாக இப்பிரதேசத்தை மேம்படுத்த முடியும். ஆகவே உரிமம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை நாம் வழங்குவோம்.
தென்பகுதியில் உள்ள மக்கள் இப்பகுதி மக்களை நேசிக்கிறார்கள். ஆனால் இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முகங்கொடுக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன. கல்வி, சுகாதாரம்; மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய பல துறைகளில் பற்றாக்குறை உள்ளதை நான் அறிவேன். யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த பிரச்சினைகள் இன்றும் தொடர்கிறது. இதற்கு நாங்கள் அரச நிர்வாக கட்டமைப்பின் ஊடாக தீர்வைப்பெற்றுக்கொடுப்போம்.
2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தனர். ஊழல் அற்ற அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள். அதைப்போன்று பாராளுமன்ற அதிகாரத்தை முழுமையாக எமக்களித்தார்கள். நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் நாட்டு மக்கள் இன, மத விடயங்களுக்கு அப்பாற்பட்டு திறமையான மற்றும் ஊழலற்;றவர்களை தெரிவு செய்ய வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கு நாம் முன்னுரிமையளித்துள்ளோம். ஸ்திரமான நிலையில் இருந்து கொண்டு தான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அரச சேவையானது நாட்டு மக்களுக்கு வினைத்திறனதாக அமைய வேண்டும். அதற்கு சாதகமாக சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். அரசியல் தலையீடுகள் இல்லாமல் அரசசேவை தற்போது சுயாதீனமாக இடம்பெறுகிறது. மாகாணசபைத்தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு தேவையான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு என்றும் முன்னுரிமையளிப்போம். இந்த மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும்; கண்டுள்ளது. அதனை ஆற்றுப்படுவதற்கான பொறுப்பு எமக்குண்டு. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என்றார்.