கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை பொறுப்பேற்பு!

கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை பொறுப்பேற்பு!

editor 2

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை இன்று திங்கட்கிழமை (02) காலை உத்தியோகபூர்வமாக தமது சேவையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த 16 வருடங்களாக குருவாக, உதவி ஆயராக, ஆயராக மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் கடமையாற்றிவிட்டு, தனது ஓய்வினை கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை திருத்தந்தையிடம் அறிவித்ததை தொடர்ந்து, மட்டக்களப்பு மறைமாவட்டத்தினை பரிபாலிப்பதற்காக திருத்தந்தையினால் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர் கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக தமது சேவையினை உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்துள்ளார்.

இதன்போது கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை மட்டக்களப்பு ஆயர் இல்லத்திலிருந்து ஓய்வு நிலை ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, மேலைத்தேய வாத்திய அணிவகுப்புடன் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர்ந்து மரியாள் பேராலயத்தில் பதவியேற்பினை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் ஜோச் ஜீவராஜ் அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், 243வது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிக்கேட் கொமாண்டர் சந்திம குமாரசிங்க, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், விமானப்படை உயரதிகாரிகள் உட்பட சர்வ மத தலைவர்கள் பெருமளவினர் கலந்துகொண்டனர்.

Share This Article