இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியைச் சந்தித்தார்!

editor 2

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இச்சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது, இந்திய – இலங்கை உறவுகளில் மூன்று மைல்கற்கள் எட்டப்பட்டன.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோர் கூட்டாக மெய்நிகர் ஊடாக திறந்துவைத்தனர்.

அத்துடன், கொழும்பு, திருகோணமலை ஆகிய நகரங்களிலுள்ள மாதிரிக் கிராமங்களிலுள்ள 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இதேவேளை, 6 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் நினைவுப் படிகம் மெய்நிகர் ஊடாக திறந்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்துவைத்தனர்.

இதில் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆள்ளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article